×

தொடரும் வன்முறை மணிப்பூரில் வீடுகளுக்கு தீ வைப்பு: இம்பாலில் ஊரடங்கு நீட்டிப்பு

இம்பால்: மணிப்பூரில் ஆளில்லாத 2 வீடுகளுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது. மணிப்பூரில் இம்பால் நகரத்தின் மேற்கு பகுதியில் மெய்டீஸ் சமூகத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். கடந்த மே மாதம் நடந்த கலவரத்துக்கு அஞ்சி அப்பகுதியில் வசித்த மக்களில் பெரும்பாலானோர் வீடுகளை விட்டு சென்று வேறு பாதுகாப்பான இடங்களில் தங்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் ஆளில்லாமல் காலியாக கிடக்கும் வீடுகளுக்கு சிஆர்பிஎப் வீரர்களும், ராணுவத்தினரும் ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இம்பாலில் ஆளில்லாமல் இருந்த 2 வீடுகளுக்கு வன்முறை கும்பல் நேற்று அதிகாலை தீ வைத்தது. லாங்கோல் மண்டல தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ராணுவத்தினர் பணி முடிந்து வெளியேறி, சிஆர்பிஎப் வீரர்கள் உள்நுழையும் இடைவெளியை பயன்படுத்தி வன்முறை கும்பல் இந்த வீடுகளுக்கு தீ வைத்துள்ளது. இதையடுத்து, இம்பாலில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், “மணிப்பூரில் நிலைமை இன்னும் கொந்தளிப்பு, பதற்றம் நிறைந்ததாக உள்ளது. ஆனால் கலவரம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

The post தொடரும் வன்முறை மணிப்பூரில் வீடுகளுக்கு தீ வைப்பு: இம்பாலில் ஊரடங்கு நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Meites ,Dinakaran ,
× RELATED ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து...